சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

11.010   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது

திருஈங்கோய்மலை -
அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,
இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்
மன்னதென நின்றான் மலை.


[ 1]


அந்தவிள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக்
கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் சந்தின்
இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு
மலைவளைக்கை வில்லி மலை.


[ 2]


அம்பவள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச்
செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி கொம்பின்
இறுதலையினாற் கிளைக்கும் ஈங்கோயே நம்மேல்
மறுதலைநோய் தீர்ப்பான் மலை.


[ 3]


அரிகரியக் கண்டவிடத் தச்சலிப்பாய் ஓடப்
பிரிவரிய தன் பிடியைப் பேணிக் கரிபெரிதும்
கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே
மையடுத்த கண்டன் மலை.


[ 4]


அரியும் உழுவையுமே ஆளியுமே ஈண்டிப்
பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் சொரிய
எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம்
திரியாமற் செற்றான் சிலம்பு.


[ 5]


Go to top
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே
வாளி கொடு தொடரும் மாக்குறவர் கோளின்
இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற்
கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று.


[ 6]


இடுதினைதின் வேழங் கடியக் குறவர்
வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற நெடுநெடென
நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணி
பூண்டகழை யேறி பொருப்பு.


[ 7]


ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்தி
நான்றகறிக் கேறசலை நற்கிழங்கை ஊன்றவைத்
தென்அன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் எங்கோயே
மின்னன்ன செஞ்சடையான் வெற்பு.


[ 8]


ஈன்ற குழவிக்கு மந்தி இருவரைமேல்
நான்ற நறவத்தைத் தான்நணுகித் தோன்ற
விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல்
வரலாம்நோய் தீர்ப்பான் மலை.


[ 9]


உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப்
பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் கண்டிருந்த
மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே
பூமயிலி தாதை பொருப்பு.


[ 10]


Go to top
ஊடிப் பிடிஉறங்க ஒண்கதலி வண்கனிகள்
நாடிக் களிறு நயந்தெடுத்துக் கூடிக்
குணம்மருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர்
குணமருட்டுங் கோளரவன் குன்று.


[ 11]


எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் குற்றதெனக்
கையிற் கணைகளைந்து கன்னிமான் பையப்போ
என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள்
சென்றன்று வென்றான் சிலம்பு.


[ 12]


ஏழை இளமாதே என்னொடுநீ போதென்று
கூழை முதுவேடன் கொண்டுபோய் வேழ
வினைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம்
வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு.


[ 13]


ஏனம் உழுத புழுதி இன மணியைக்
கானவர்தம் மக்கள் கனலென்னக் கூனல்
இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல்
மறுக்கங்கள் தீர்ப்பான் மலை.


[ 14]


ஏனங்கிளைத்த இனபவள மாமணிகள்
கானல் எரிபரப்பக் கண்டஞ்சி யானை
இனமிரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல்
வினையிரியச் செற்றுகந்தான் வெற்பு.


[ 15]


Go to top
ஒருகணையும் கேழல் உயிர்செகுத்துக் கையில்
இருகணையும் ஆனைமேல் எய்ய அருகணையும்
ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயே
கோளரிக்கும் காண்பரியான் குன்று.


[ 16]


ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந் தண்போதைத்
தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் மூங்கில்
தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக்
குழையிறுத்த காதுடையான் குன்று.


[ 17]


ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி
மாடுபுக வான்கை மிகமடுத்து நீடருவி
மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே
கோச்சீயம் காண்பரியான் குன்று.


[ 18]


கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்
உண்டு குளிர்ந்திலவென் றூடிப்போய்க் கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு
மறைக்கீறு கண்டான் மலை.


[ 19]


கருங்களிற்றின் வெண்கொம்பாற் கல்லுரல்வாய் நல்லார்
பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப வருங்குறவன்
கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே
மைக்கொணருங் கண்டன் மலை.


[ 20]


Go to top
கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில் ஏந்தி மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார்
குரவரும்பு செஞ்சடையான் குன்று.


[ 21]


கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச்
சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு மடக்கிளிகள்
கீதம் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால்
வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு.


[ 22]


கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம்
இறுத்துக்கைந் நீட்டும்ஈங் கோயே செறுத்த
கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த
விடமிடற்றி னான்மருவும் வெற்பு.


[ 23]


கங்குல் இரைதேருங் காகோ தரங்கேழற்
கொம்பி னிடைக்கிடந்த கூர்மணியைப் பொங்கும்
உருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன்
வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு.


[ 24]


கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா
திலைகைக்கொண் டேந்திக்கால் வீச உலவிச்சென்
றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய
வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு.


[ 25]


Go to top
கன்னிப் பிடிமுதுகிற் கப்புருவம் உட்பருகி
அன்னைக் குடிவரலா றஞ்சியே பின்னரே
ஏன்றருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே நீங்காத
மான் தரித்த கையான் மலை.


[ 26]


கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை
கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் துள்ளி
இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம்
மனக்கவலை தீர்ப்பான் மலை.


[ 27]


கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக்
கொல்லை எழுந்த கொழும்புறவின் முல்லை அங்கண்
பல்லரும்ப மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும்
கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று.


[ 28]


கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட
எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி வல்லே
இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப்
பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு.


[ 29]


கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல்
வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் தண்கோ
டிளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம்
விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு.


[ 30]


Go to top
காந்தள்அங் கைத்தலங்கள் காட்டக் களிமஞ்ஞை
கூந்தல் விரித்துடனே கூத்தாடச் சாய்ந்திரங்கி
ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
கார்க்கொன்றை ஏன்றான் கடறு.


[ 31]


குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குற்றி
நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் சிறுகுறவர்
கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே
மைந்நீட்டுங் கண்டன் மலை.


[ 32]


கூழை முதுமந்தி கோல்கொண்டுதேன்பாய
ஏழை யிளமந்தி சென்றிருந்து வாழை
இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சி
சிலையால்தான் செற்றான் சிலம்பு.


[ 33]


கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை
மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண் டொல்லை
இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய்
வருங்கைக் களைவான் மலை.


[ 34]


கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர்
கவ்வைக் கடிபிடிக்குங் காதன்மையால் செவ்வை
எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர்
குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று.


[ 35]


Go to top
கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல்
படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி நெடுநாகம்
தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே தாழ்சடைமேல்
வண்டூன்றுந் தாரான் மலை.


[ 36]


கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர்
வேங்கைமணி நீழல் விளையாடி வேங்கை
வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு
வரவதனைக் காப்பான் மலை.


[ 37]


சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை
மந்தண் மடப்பிடியின் வாய்க்கொடுப்ப வந்ததன்
கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே
விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு.


[ 38]


சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து
கொந்தியினி துண்ணக் குறமகளிர் மந்தி
இளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின்
வளமகளிர் பாகன் மலை.


[ 39]


சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி
சேரத் தருக்கி மதுக்கலந்து வீரத்
தமரினிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே வெற்பின்
குமரன்முது தாதையார் குன்று.


[ 40]


Go to top
தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம்
வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் தீயோங்கிக்
கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கொன்றைத் தாரான் வரை.


[ 41]


செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப்
பிடிபட்ட மாக்களிறு போந்து கடம்முட்டி
என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற்
பொன்னேர் அனையான் நெபாருப்பு.


[ 42]


சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப்
புனைநீடு பொன்னிறத்த வண்டு மனைநீடி
மன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம்
சென்னி அணிந்தான் சிலம்பு.


[ 43]


செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து
வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி பந்தியாத்
தேக்கிலைக ளிட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே
மாக்கலைகள் வைத்தான் மலை.


[ 44]


தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள்
இடம்புகுத்தங் கின்நறவம் மாந்தி உடன்கலந்து
மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே
கோக்குரவை ஆடிகொழுங் குன்று.


[ 45]


Go to top
தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள் தகையத்
தாமரையிற் பாய்ந்துகளுந் தண்புறவில் தாமரையின்
ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும்
வாட்டங்கள் தீர்ப்பான் மலை.


[ 46]


தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய்
வள்ளவட்டப்பாழி மடலேறி வெள்ளகட்ட
காராமை கண் படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச்
சேராமைச் செற்றான் சிலம்பு.


[ 47]


தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு
தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து வான்குணங்கள்
பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர்
சீராட்ட நின்றான் சிலம்பு.


[ 48]


தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின்
கானமர்கற் பேரழுகு கண்குளிர மேனின்
றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர்
வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு.


[ 49]


தோகை மயிலினங்கள் சூழந்து மணிவரைமேல்
ஒகை செறிஆயத் தோடாட நாகம்
இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல்
வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு.


[ 50]


Go to top
நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம்
இறவி லியங்குவான் பார்த்துக் குறவர்
இறைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை
விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு.


[ 51]


நாக முழைநுழைந்த நாகம்போம் நல்வனத்தில்
நாகம் விழுங்க நடுக்குற்று நாகந்தான்
மாக்கையால் மஞ்சுரிஞ்சும் ஈங்கோயே ஓங்கிசெந்
தீக்கையால் ஏந்தி சிலம்பு.


[ 52]


நாகங் களிறுநுங்க நல்லுழுவை தாமரையின்
ஆகந் தழுவி அசைவெய்த மேகங்
கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே ஓங்கு
பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு.


[ 53]


பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை
கணவனிடந்திட்ட கட்டி உணவேண்டி
எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல்
வண்கங்கை ஏற்றான் மலை.


[ 54]


பன்றிபருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித்
தென்றி மணிகிடப்பத் தீயென்று கன்றிக்
கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர்
மருவரியான் மன்னும் மலை.


[ 55]


Go to top
பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று
சீறி மருப்பொசித்த செம்முகமாத் தேறிக்கொண்
டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும்
வில்லே கொடுவெகுண்டான் வெற்பு.


[ 56]


பிடிபிரிந்த வேழம் பெருந்திசைநான் கோடிப்
படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் டிடரா
இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர்
குருவருட்குன் றாய்நின்றான் குன்று.


[ 57]


பொருத கரியின் முரிமருப்பிற் போந்து
சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் கருமந்தி
முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும்
திக்குகக்கச் செற்றான் சிலம்பு.


[ 58]


மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம்
குறவர் சிறார்குடங்கைக் கொண்டு நறவம்
இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்று
வளவெயில்தீ யீட்டான் மலை.


[ 59]


மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச்
சிலைநுதலி சீறிச் சிலைத்துக் கலைபிரிய
இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே
மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு.


[ 60]


Go to top
மரையதளும் ஆடும் மயிலிறகும் வேய்ந்த
புரையிதணம் பூங்கொடியார்புக்கு நுரைசிறந்த
இன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயே
பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு.


[ 61]


மலையர் கிளிகடிய மற்றப் புறமே
கலைகள் வருவனகள் கண்டு சிலையை
இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப்
புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு.


[ 62]


மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறவொளிர்
முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் அத்தகைய
ஏனற் புனம்நீடும் ஈங்கோயே தேங்குபுனல்
கூனற் பிறையணிந்தான் குன்று.


[ 63]


மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல்
முந்தி இருந்து முறைமுறையே நந்தி
அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம்
வளைந்தோடச் செற்றான் மலை.


[ 64]


மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண்
முந்திப் பறித்த முறியதனுள் சிந்திப்போய்த்
தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல்
வானாறு வைத்தான் மலை.


[ 65]


Go to top
முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாது
கள்ளார்ந்த பூப்படியுங் கார்மயில்தான் ஒள்ளார்
எரிநடுவுட் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே
புரிநெடுநூல் மார்பன் பொருப்பு.


[ 66]


வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை
அளைந்து வடுப்படுப்பான் வேண்டி இளந்தென்றல்
எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்பு
வில்லிக்குக் கூற்றானான் வெற்பு.


[ 67]


வான மதிதடவல் உற்ற இளமந்தி
கான முதுவேயின் கண்ணேறித் தானங்
கிருந்துயரக் கைநாட்டும் ஈங்கோயே நம்மேல்
வருந்துயரம் தீர்ப்பான் மலை.


[ 68]


வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து
காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப வேயணைத்து
மாப்பிடிமுன் ஒட்டும்ஈங் கோயே மறைகலிக்கும்
பூப்பிடிபொற் றாளான் பொருப்பு.


[ 69]


வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ
முழுகியதென் றஞ்சிமுது மந்தி பழகி
எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட்
கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.


[ 70]


Go to top

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location: திருஈங்கோய்மலை
1.070   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வானத்து உயர் தண்மதி தோய்
Tune - தக்கேசி   (திருஈங்கோய்மலை )
11.010   நக்கீரதேவ நாயனார்   திருஈங்கோய்மலை எழுபது   திருஈங்கோய்மலை எழுபது
Tune -   (திருஈங்கோய்மலை )

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song